Saturday, September 5, 2015

நான் அல்ல நீதான்

 நான் அல்ல நீதான்

கீதை படித்து விட்டால் திருவாசகம் புரியும்.
திருவாசகம் படித்தால் பகவத் கீதையைப் புரிந்து கொள்ளலாம்.

திருவாசகத்தின் விகுதி என்ன? சத்தியம்தான்.

உலகின் மகா சக்தியிடம் பரிபூரண சரணாகதி என்பது தான் திருவாசகம்

பகவத் கீதை இரண்டின் விழுப்பொருள்!

பகவத் கீதை பற்றி 6 மாதம் பேருரை நிகழ்த்தினார் ஆச்சார்யா வினோபாபாவே! அவர் மிகப் பெரிய ஞானி! வேதகாலத்து மகரிஷிகளை நமக்கு நினைவூட்டுபவர்.

ஆச்சார்யா வினோபாவை மகாத்மா காந்தியிடம் அனுப்பினார்கள். அவரை பார்த்து பேசிய பிறகு மகாத்மா காந்தி எழுதினார். " எனக்கு ஆசிரியராக இருக்க வேண்டிய ஒருவரை ஏன் மாணவர் என்று அனுப்பி இருக்கிறீர்களே" என்று வினோபாவின் தந்தைக்கு மகாத்மா எழுதினார்.

அப்படிப்பட்ட ஆச்சார்யா வினோபா சொன்னார். " ஆறுமாதகாலம் கீதையைப் பற்றிப் பேசினேன். இவை அனைத்தும் இரண்டே இரண்டு வார்த்தையில் முடிந்துவிட்டது. அவை என்ன? நான்  (மனிதன்) என்பதில் ஆரம்பித்து நீ (இறைவன்) என்பதில் முடிந்து விட்டது" என்றார் வினோபாவே!

அதுபோல் "எல்லாம் நீ! அப்பன் நீ! அம்மை நீ! நீதான்! நான் இல்லை!" என்பது திருவாசகம்.

அத்தனை பாடல்களும் வேண்டாம். ஒருவரி! ஒரே ஒரு வரி! " நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே!" இந்த வரியை நினைவில் கொண்டால் போதும்.

எது நேருமோ! என்று நேருமோ! அது உன் சித்தம். இது தான் நமது பிரார்த்தனை !

திருவாசகத்தில் உள்ள அத்தனைப் பாடல்களும் என்ன சொல்கின்றன? "எல்லாம் உன் சித்தம்! இறைவா!!" இது தான் திருவாசகம் சொல்வது.

இது தான் பகவத் கீதை சொல்வது.

இது தான் திருவருட்பா சொல்வது.

இப்போது பாருங்கள், " முத்தி நெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனைப் பக்தி நெறி அறிவித்து!"

"சித்தமலம் அறிவித்து சிவமாக்கி..."

"இமைப்பொழுதும் ஏன் நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க !"

'விடுமின் வெகுளி'  இப்படி எல்லாவற்றையும் சொல்லிவிட்டு மாணிக்கவாசகர் சொல்கிறார்" அத்தன் எனக்கு அருளியவாறு"என்கிறார்!

"நான் யார் ? நானா சொல்கிறேன்?எனக்கு அவன் அருளியதைச் சொல்கிறேன்"

"அவன் சித்தம்"என்கிறார்.

"நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே!"என்கிறார்.

பகவத் கீதை, திருவாசகம்இரண்டும் ஒன்றே!

இரண்டும் சொல்வது ஒன்றே!

'நான் இல்லை! நீ தான்! எனவே அவன் நன்றே செய்தாலும்,பிழை செய்தாலும் அது அவன் செயல் அவன் சித்தம் என்று ஒப்படைத்து விடுங்கள்!'

அவன் பார்த்துக் கொள்வான்! மீண்டும் சொல்கிறேன்! நான் இல்லை! நீ தான் என்று பகவானிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்து விடுவது தான் பகவத் கீதை! அது தான் திருவாசகம்! அது தான் திருவருட்பா !







































 

No comments:

Post a Comment